Monday, December 28, 2009

ஒரு கவிதை மொழி...



எல்லா மொழியிலும்
பேசியாகிவிட்டது..
முத்த மொழியோடு பேசுவோமா..
************
உறவுகள் யாவும் பகையானது..
உன் நினைவுகள் எனக்கு
உறவானது..!

உன்னை மறக்க நினைப்பதால்
உன் நினைவுகள் மீண்டும் கொல்கிறது..!


Monday, December 7, 2009

என் உயிர் காதலே


துடிக்காத என் இதயத்தை
துடிக்க வைத்தவனே..
உயிரில்லா என் உடலுக்கு
காதல் உயிர் கொடுத்தவனே..
உன் மீது கொண்ட
காதலை ஜென்மத்திற்கும்
அழிக்க முடியாது..

காத்திருக்கும் ஒவ்வொரு
நிமிடங்களையும் சுகமாய்
உணர்கிறேன்..உனக்காக
காத்திருப்பதால்..!
இமைகளை முடினால்,
கனவில் உன் முகம்..
என் இதயம் கொண்ட
காதலுக்கு கண்ணீர் மட்டும்
துணை..!

ரோஜா மலரை பறிக்கையில்
கைகளில் முட்கள் குத்தியது..
என் கைகளில் இருக்கும் ரோஜா
மலர்தான் தெரிந்தது..
உனக்கும் என் மனதில் இருக்கும்
வேதனை புரியவில்லை..

காத்திருப்பேன்
என் உயிர் காதலே..!


தொடரும் நினைவுகளுடன்,

Friday, December 4, 2009

ஆயிரம் எண்ணங்கள் 12


கோபம்

கோபப்படுவீர்களா? இல்லை என்பது கண்ணாடி முன் சொல்லும் பொய். காந்திக்குக்கூட கோபம் வரும் என்பது சரித்திர சாத்தியம். கோபம் மனித குணம். ஆனால் கோபப்படுவது அவசியமானது அல்ல. கோபம் என்பது என்ன? கோபம் என்பது சிந்தனை சமைக்கும் நிலை. எதிர்பார்ப்பு நிறைவேறாத போது வரும் உணர்ச்சி. கோபம் என்பது நஷ்டம் தரும் உணர்வு; வெளிப்பாடு.

பிறகு ஏன் கோபம் எனும் உணர்ச்சி நம் அன்றாட வாழ்க்கையின் அங்கமாகிறது? மனவியல் ரீதியாக பார்த்தால் கோபம் என்பது ஒரு பழக்கம். ஒரு வேலையில் ஈடுபடும் பொழுது சிலருக்கு சிகரெட் பற்ற வைத்துக் கொள்ள வேண்டும். இந்த சிகரெட் எந்த விதத்திலும் அவர்கள் செயல் திறனை கூட்டவோ வேலை சுமையை குறைக்கவோ உதவாது என்றாலும், இது ஒரு பழக்கம். இதே போல் தான் நம் சிலரிடம் உள்ளும் கோபம் ஒரு பழக்கமாகி விட்டது. எந்த ஏமாற்றம் வந்தாலும் கோபம் வருவது குழந்தை பருவத்திலிருந்தே வளர்ந்து வரும் பழக்கம்.
ஏமாற்றத்தின் விளைவு சோகம்,கண்ணீர்,அச்சம்,அவமானம் என்றெல்லாம் வெளிப்பட்டாலும், அடிப்படை கோபம்தான்.

கோபம் வரவே கூடாதா? உணர்ச்சிகள் யாருக்கும் மழுங்கவே கூடாது. உணர்ச்சி மழுங்கினால் மனம் நோயுற்றதாய் பொருள். கோபம் என்பது ஓர் உணர்ச்சி. அது வராமல் இருப்பது பயிற்சியினால் மட்டுமே. கோபப்படுவது பிரச்சனையாவதில்லை. கோபத்தின் வெளிப்பாடு மட்டுமே பிரச்சனைகளை உருவாக்கும். நாம் எப்படி கோபத்தை கட்டுபடுத்தலாம் என்று பார்க்கலாமே! நாம் கோபித்து கொள்ளும் எதிர் நபரும் மனிதர்தான். ஒரு புன்னகை எப்படி எளிதாய் எதிர் புன்னகை ஏற்படுத்துமோ அதே போலத்தான் கோபமும். ஏன் நாமது வாழ்க்கையை புன்னகையால் அலங்கரிக்ககூடாது? புன்னகை ஒருவரின் கோபத்தையும் தணிக்கும் என்பதை நாமில் சிலர் உணர மறுக்கிறோம்.

மற்றவர்களை புரிந்துகொள்ளுதல் என்பது மிகவும் எளிதாய் நாம் கற்றுக்கொள்ளும் ஒரு விஷயம். முடிதளவு நாம் பிறரின் உணர்ச்சிகளையும் புரித்துக் கொண்டால் கோபம் என்பது சற்று தள்ளியே போகும். கோபம் பிறரின் மனதை காயபடுத்துவது மட்டுமில்லை; உடலையும் மனதையும் பாதிக்கும் ஒரு உணர்ச்சி. இதய துடிப்பு அதிகரிப்பதும்,கோபத்தினால் கவனமும் சிதறுகிறது. நிம்மதியும் குலைகிறது. கோபத்தை திசை திருப்புவதும் அவசியம். நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்வதும்,வாய்விட்டு சிரிப்பது, மற்றவர்களை நன்றாக கவனித்து புரிந்துக் கொள்ள முயல்வது, எல்லா காரியங்களையும் சிந்தித்தே செயல்வது போன்றவை கோபத்தை குறைத்துக்கொள்ள உதவும்.

எனவே கோபத்தை கட்டுப்படுத்த முயல்வோம்.


தொடரும் நினைவுகளுடன்,

Wednesday, November 25, 2009

தேடல்..!


எனது பயணங்கள்
உனது விழிகளில் தொடங்கியது..
இன்று..!
உன்னை நான் தொலைத்த
வேளையில்,என் வாழ்க்கையின்
தேடல் தொடங்கியது..

பள்ளியில் படித்த பாடத்தை விட
உன்னிடம்
காதல் பாடத்தை படித்ததே
அதிகம்.. இருந்தும்
காதல் என்னும் தேர்வில்
தோற்றது ஏனோ..?
உன் கரம் கோர்கையில்
நினைவுகள் ஆயிரம்..
நினைத்தாலே இனிக்கும்
தருணம்..

இது சோகமானாலும்
என் வாழ்க்கையின் தேடலில்
நெஞ்சுக்குள் ஒரு சுகம்..

இதயம் பேசும் என்
தனிமையான இரவுகளுடன்
என் காதலை
யாசிக்கிறேன்..!
தொடரும் நினைவுகளுடன்

Thursday, October 15, 2009

தீபாவளி வாழ்த்துக்கள்..!



தீபாவளி திருநாளில் அனைவருக்கும் எனது தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். இந்நாளில் அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாட எனது வாழ்த்துக்கள்.
தொடரும் நினைவுகளுடன் உங்கள்

Saturday, September 19, 2009

தேவதையே வா.. வா


எனக்கு இந்த தேவதையை அனுப்பியவர் பிரிவையும் நேசிப்பவள் காயத்திரி. இத்தருணத்தில் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தேவதையிடம் வரம் கேட்க நான் ரெடி.

முதல் வரம் : இன்று போல் என்றும் நான் வாழக் கூடாது.

இரண்டாம் வரம் : இந்த உலகத்தில் வாழும் எல்லா ஜீவராசிகளும் நோய் நொடி இல்லாமல்,சந்தோசமாக வாழ வேண்டும்.

மூன்றாம் வரம் : என்னவனின் நினைவுகள் அடுத்த ஜென்மத்திலும் தொடர வேண்டும்.(இந்த தொடரும் நினைவுகள் போல )

நான்காம் வரம் : பலரின் மனதை நான் காயப்படுத்தி உள்ளேன். அவர்களின் அன்பை மீண்டும் பெற ஒரு வரம் வேண்டும்.

ஐந்தாம் வரம் : அழகான அந்த பள்ளிக்கூட வாழ்க்கை மீண்டும் ஒரு முறை அனுபவிக்க வேண்டும்.

ஆறாம் வரம் : இந்த உலகம் அமைதியாக இருக்க வேண்டும்.

எழாம் வரம் : நான் இழந்த ஒவ்வொரு உறவுகளையும் மீண்டும் ஒரே முறை சந்திக்க வேண்டும்.

எட்டாம் வரம் : இன்னும் நிறைய கவிதைகள் நான் எழுத,அதை என்னவன் ஆசையாக படிக்க வேண்டும்.

ஒன்பதாம் வரம் : என்னால் முடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.

பத்தாம் வரம் : இந்த ஜென்மத்தில் நான் வாழ்ந்த வாழ்க்கை போதும், அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் நான் என்னவனக்கு குழந்தையாக பிறக்க வேண்டும்.

என் வரத்தை கேட்டு முடித்து விட்டேன். தேவதையிடம் பிறரும் வரத்தை கேட்டு நினைவேற எனது வாழ்த்துக்கள். என்னிடம் வந்த தேவதையை நான் இவர்களுக்கு தான் அனுப்ப போகிறேன்..

*விக்கி
*மகா
*அன்பு
*நட்புடன் ஜமால்
*வால் பையன்
தொடரும் நினைவுகளுடன் உங்கள்

Sunday, September 6, 2009

மறக்க நினைக்கும் தருணம்..


அன்புள்ள டைரி,

இந்நாளை என் வாழ்க்கையெனும் டைரியிலிருந்து மறக்க நினைக்கும் நாள். இருப்பினும் மறக்க முடியவில்லை. ஏன்? எல்லாம் உன் காதல் செய்த விளையாட்டு. உன்னிடம் என் மனதை பரிக்கொடுத்த நாள். நினைத்து பார்க்கையில் இன்னும் நெஞ்சினில் தேனாக தித்திக்கும் தருணம். உன் காதலை என்னிடம் சொன்ன நாள் தான் இன்று.

என் உள்ளதையும் உணர்வையும் புரிந்துக் கொண்டவன் நீ. உன் காதலை என்னிடம் சொன்ன பொழுது ஒரு கணம் நான் வானத்தில் பறவையை பறந்து வந்த நொடி..ஏதோ ஒரு பார்வையில் நெஞ்சம் தடுமாறியது. என் தாயிடம் நான் உணராத பாசத்தை உன்னிடம் கண்டேன். உன் கனவுகளை கவிதையாக வரைந்து நீ காதலை சொன்ன விதம் உன் மீது காதல் தீயை பரவவைத்தது. காதலுக்கு கண்கள் இல்லை என்பார்கள்,அது முற்றிலும் பொய். ஏன் தெரியுமா? நான் உன் கண்களை பார்த்த பிறகு தான் காதலிக்க தொடங்கினேன். முதல் முறையாக நான் வைரமுத்துவின் கவிதை ரசித்த நாளும் இந்நாள் தான்.

"உன் பிம்பம் விழுந்தே கண்ணாடி உடையும்,கண்ணிரண்டும் மொழிக்கொள்ளும்,
காதலித்துப் பார்..தலையணையை அணைப்பை,தினமும் மூன்று முறை பல் துலக்குவாய்,காத்திருந்தால் நிமிஷங்கள் வருஷம் என்பாய்,வந்து விட்டால் வருஷங்கள் நிமிஷம் என்பாய்"
நான் ரசித்த வைரமுத்துவின் கவிதை வரிகள். உன்னை காதலித்த பிறகு நான் மட்டும் உணர்ந்த ரகசியங்கள் இவை.

உன் காதலினால் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.பாசத்தின் மறுபகுதியை உணர வைத்தவனும் நீ.நான் காய்ச்சல் இருந்த பொழுது என்னக்கா நீ உன் நேரத்தை ஓதுக்கிய பொழுது, என்னை ஒரு குழந்தை போல் கவனித்துக் கொண்ட பொழுதும் நீயே என் உலகம் என்று அறிந்தேன்.ஏனோ என் சந்தோசம் நீண்ட நாள் நிடிக்கவில்லை.

உன் கண்கள் காதலின் ஆழத்தை சொன்னது.ஆனால் உன் உதடுகள் மட்டும் பொய்களை சொல்லி பிரிந்து சென்றாய். உன்னோடு நான் இருந்த 170 நாட்கள் மரண படுக்கையிலும் மறக்க மாட்டேன். அந்த ஒவ்வொரு நாளும் நான் என்னையும் என் என் காதலையும் அறிந்துக் கொண்ட நாள். மிக மிக அழகான நாட்கள்,வார்த்தைகளால் சொல்ல முடியாதடா..உனக்காக ஒரு கவிதை:

எனக்கு தெரியும் உன் காதல்
எனக்கு மட்டும் தான் என்று..
பிறகு என் இந்த பிரிவு..

பூக்கள் பறிபதற்கு அல்ல..
என் இதயங்கள் எரிப்பதற்கு
அல்ல கள்வனே..!
மீண்டும் ஒரு முறை வாழ
வரம் வேண்டும்..உன்னோடு
நான் வாழ்ந்து பார்க்க..
வெண்மதியை தூது அனுப்புகிறேன்..
என் பிரிவின் சோகத்தை
உன்னிடம் சொல்ல..!

தொடரும் நினைவுகளுடன் உங்கள்..

Tuesday, August 25, 2009

என் காதலே..என் காதலே


உன் விழிக்குள் இமையாக
நான் கொண்ட காதல்..
உன்னை நான் உணர்ந்த
நாள்..என்னை நான் மறந்த நாள்..

நீ எனக்கு தந்த முதல்
முத்தத்தை இன்றும்
சேமித்து வைத்துள்ளேன்..
என் காதலின் புனிதமான
சின்னமாய்..!

காதலினால் ஏற்பட்ட
காயங்களை அழிப்பதற்கு
கண்ணிரை செலவழிக்கிறேன்..
ஈட்டியாய் உன் நினைவுகளை
என் இதயத்தில் பாய்த்து விட்டாய்..
சிலுவைகலாய் உன் நினைவுகளை
சுமந்து கொண்டு உயிரோடு
நான் இறந்து விட்டேன்...!

நான் இல்லாமல் நீ
இருப்பாய்..ஆனால்
நீ இல்லாமல் என்றும்
நான் இல்லையடா..!

தொடரும் நினைவுகளுடன் உங்கள்..



Wednesday, August 12, 2009

கவிதைகள் சொல்ல வந்தேன் அன்பே..!


அர்த்தமின்றி முத்தம்
ஒன்று தந்தாயே..!
மேகத்தில் தவம்
கிடைக்கும் துளியாக
நான் காத்திருந்த
அந்த நொடி..!

உந்தன் புரியாத
உறவில் நான் கண்ட
சந்தோசம் வார்த்தைகளால்
சொல்ல இயலாது..!

கண்கள் உறங்காமல்
உன் நினைவுகள் என்னை
திண்டுகிறது..!
சிதறிய நினைவுகளை
எல்லாம் நீ தான்
என்னுள் சேமித்தாய்..
உன் நினைவுகளை
தவிர்க்க இன்று
போகாத தூரமில்லை..!

தனிமையில் நடந்து
செல்கிறேன்..என்
காலம் முழுதும் உன்னை
காதலிப்பேன்..இறக்கும் தருணம்
வரை உன் நினைவுகள்
என்னுள் தொடரும்..


எனது 100வது படைப்பு..இந்த கவிதை எனக்கு மிகவும் அர்த்தமுள்ள கவிதை.
தொடரும் நினைவுகளுடன் உங்கள்..

Wednesday, July 22, 2009

சுவாரஸ்ய பதிவர் விருது


இந்த விருதை எனக்கு அளித்த காயத்திரி அக்கா அவர்களுக்கு நன்றி. நான் விருதை கொடுக்க நினைக்கும் சிலர் ஏற்கனவே பெற்றுவிட்டார்கள்.நான் அடைந்த இந்த விருதை பிறரும்( என் சக நண்பர்களும்) அடைய வேண்டும் என்பதற்க்காக,இதனை அவர்களுக்கு பரிசாக கொடுக்கிறேன். நான் ரசித்து படிக்கும் சிலருக்கு இந்த விருதை அளிக்கிறேன்.

தூயா- http://thooya.blogspot.com/ இவரின் பதிவுகள் யாவும் அருமை. இவர் இந்த விருதை பெற தகுதியானவரும் கூட. இவருக்கு விருதை தருவது எனக்கு மகிழ்ச்சியே.

அன்பு- http://anbu-openheart.blogspot.com/ அன்பின் அன்பு இவரும் ஒரு நல்ல எழுத்தாளர் தான். அன்பின் பதிவுகளை படிக்க ஆர்வமாகவும் சில நேரங்களில் நகைச்சுவையாகவும் இருக்கும்.

ஸ்ரீமதி-http://karaiyoorakanavugal.blogspot.com/ ஸ்ரீமதி அப்பப்ப இவரின் கவிதைக்கு பதிலே இல்லை. அருமையாக கவிதை எழுதுவர். கவிதைகள் ஒவ்வொன்றிலும் ஆயிரம் அர்த்தங்கள் அடங்கி உள்ளது.

விருதை பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.


Tuesday, July 14, 2009

உன்னால்..


என் மனதை பறித்து
சென்றவன் அவனே..!
என் வாழ்க்கையை
உணர வைத்தவனே..!

உன்னால் என் மனதில்
பூத்தது புது உறவு..
உன் சின்ன சின்ன
பார்வை என்னுள்
காதலை ஏற்படுத்தியது..

உன்னை பார்த்தால்
சில நிமிடம் மௌனம்..
ஏன்? பூன்னகைகள்
பூத்து என் மனதை
ஆளுகிறாய் அன்பே..!

கனவில் வருடும்
என் காதல்
நிஜமானது உன்னால்..
உயிரின் ஓசை
கேட்க செய்தவன் நீயாடா..

மறுபடியும் பிறவி
எடுத்தேன் உன்னால்..
போதும் போதும் இந்த
காதல் ஏக்கங்கள் கண்ணே..!

இத்தனை சுகங்களும்
தந்தவனே...!!!
உன் உறவு எனக்கு
உயிரைப் போல..
உன் உறவு பிரிந்தால்
என் உயிரும் பிரியும்..

Saturday, July 11, 2009

உனக்காக ஒரு காதல்


பல மாற்றங்கள் கண்டு
வந்தேன்..அன்பே
உன் பெயரச் சொன்னாலே..
உன்னை காணும் நேரம்
என் கண்கள் ஏங்குகிறது..

நீ வேறு நான் வேறு
என்று சொன்ன மறுகணமே
நான் உயிர் இழந்தேன்..
இரண்டுகள் பழகியும்
இறுதியில் இரு மனம்
பிரிந்தது..

சின்னதொரு காரணத்தால்
பறவைப் போல்
சிறகடித்து சென்று விட்டாய்..

தினம் தினம் என்னை
தடுமாற வைக்கிறது
உன் நினைவு..

உனக்காக உயிர் வாழ்வேன்
உனக்கேன் தெரியவில்லை..
உனக்காக அழுகிறேன்
அதை நீ உணரவில்லை..!

Monday, July 6, 2009

பறக்கும் வண்ணத்துப்பூச்சி..

படபடவென இறக்கைகளை
அடித்துக் கொண்டு
சிட்டுகுருவிப் போல்
வானத்தில் பறக்கும்
வண்ணத்துப்பூச்சியே..!

உன்னை போல வாழ
எனக்கு நீண்ட நாள்
ஆசை..

வானவில்லில் மிதக்கும்
ஏழு வண்ணங்களும்
உன்னிடத்தில்..பெண்களை
கண்டால் ஏற்படாத
பொறாமை..உன்னை கண்டால்
மட்டும் ஏற்படுவது ஏனோ?

உன் வண்ணங்கள் சிதறி
பூக்கள் சினுங்குவதை விட
நான் சினுகுவது தான்
அதிகம்..

பூக்களிடம் மௌனத்தை
சேகரித்து நீ கொண்ட
காதல்..என் காதலை விட
புனிதமானது உன் காதல்..

உன்னை விரும்பாதவர்களே
எவரும் இல்லை இந்த உலகில்..
ஆனால் என்னை விரும்புவர்கள்
எவரும் இல்லை இந்த மண்ணில்..
வண்ணத்துப்பூச்சியே..!

Tuesday, June 30, 2009

அன்பே அன்பே

எத்தனையோ உறவுகளை
கண்டேன்..
உன்னை போல் எந்த உறவும்
என்னை நேசித்ததில்லை..
சில உறவுகளின் பிரிவுக்கு
நான் வருந்தியதில்லை..

ஆனால்,
உன் பிரிவு என்னை
விழவைத்தது.
உன்னை அதிகம் நேசித்தால்
அதை விட இரு மடங்கு
உன்னை வெறுக்கிறேன்..

கண்ணிருடன் வாழும்
காலம் இன்று
இனிமையாக இருக்கிறது..
உன் நினைவோடு
வாழ்வதினால் அன்பே..!

Monday, June 15, 2009

பெண்..!


குழந்தையை சுமப்பவள்
ரத்ததை பாலாக தருபவள்
பெண்..!
ஏட்டிலும் எழுத்திலும்
உயர்ந்து நிற்பவள்..

பெண்களே..
தாயென்றும் தெய்வமென்றும்
சொல்வார்..!
பூமியில் மனிதனை
உருவகியவள் பெண்..

சோகங்களை
மறைத்து வெளியில்
போலி வேஷம்
போடுபவள்..இன்பத்துக்கும்
துன்பத்துக்கும் நடுவே
வாழ்க்கையுடன் தினம்
போராடுபவள்..!

உலகில் விலை
மதிக்க முடியாத
செல்வம் பெண்..
பெண்ணின் பொறுமை
இந்த மண்ணுக்கு
பெருமை..!

Saturday, June 13, 2009

இதயத்தை திருடியவன்..


நொடிக்கொரு தருணம்
இறந்து பிறக்கும்
இந்த இதயத்தின் வலி
உந்தன் வருகையால்
ஏற்பட்டது..!

உன் காதலின்
ஆழத்தை கண்டேன்
மறுகணம் என்
கல்லான நெஞ்சில்
காதல் நீ
பற்றிக் கொண்டது..

பனி மலர்கள் நெஞ்சோடு
அணைத்துக் கொண்டது
போல் இருந்தது..
நீ என்னை அணைக்கும்
பொழுது..!

என்னிதயத்தை
திருடியவனும் நீயே..

Monday, June 8, 2009

உன் பிரிவு..!


இன்று என் கண்களிலிருந்து
கண்ணீர் வழிகிறது
நீ ஏற்படுத்திய காயத்தினால்..
மனம் நிலவில்லாத
வானம்போல் இருண்டு
கிடக்கிறது..

மனதில் காதல்
கவிதையை எழுதிவிட்டு
கூடவே பிரிவெனும்
சோகக்கதையையும் எழுதி
சென்றாய்..

காலங்கள் மாறினாலும்
உன் மீது நான் கொண்ட
காதல் மாறாது..
என் முச்சினில் கலந்திருப்பது
உன் சுவாசம்தான்..

மனதோடு கலந்த
நினைவுகள் வாழ்ந்துக் கொண்டு
தான் இருக்கிறது இன்னும்
இறக்காமல்..

Thursday, June 4, 2009

அன்பு தாயே..!


பத்து மாதம் என்னை
சுமந்து ஈன்றேடுதவள்..
முதல் முதலாக இந்த
மண்ணில் பிறந்து நான்
பார்த்த தேவதை நீ..
எத்தனை நாள் தவம்
கிடந்தேன் உன் முகம்
காண தாயே..!

உன்னால் நான் பிறந்தேன்
இந்த உலகத்தையும்
உன்னால் அறிந்தேன்..
கோடி தவம் நான்
செய்திருக்க வேண்டும்..
உன்னை போல ஒரு
தாயை பெற..!

உன் மடியில் தலை
வைத்து படுத்தல்,
துன்பம் வேகுதுரமாக
தெரியும்..என் கண்களில்
நீர் வழிந்தால் என்னுடன்
சேர்ந்து அவள் கண்களிலும்
கண்ணீர் சிந்தும்..

மீண்டும் ஜென்மம்
எடுத்தல் உனக்கு
நான் தாயாக பிறக்க
வேண்டும்..ஏன் தெரியுமா?
நீ எனக்கு தந்த பாசத்தை
இரண்டு மடங்கு அதிகம்
உனக்கு தர வேண்டும்
என் தாயே..! நீயே என்
கனவு தேவதை அம்மா..

Wednesday, June 3, 2009

உனக்காக ஒரு கவிதை..



இதயத்தில் உயிர் எழுதிய
முதல் கவிதை
உந்தன் காதல்..

பூட்டிவைத்த ஆசைகளை
என்னுள் பத்திரமாய்
சேர்த்து வைத்துள்ளேன்..
உன்னிடம் சொல்வதற்கு..
என் கனவில் வந்து நீ
பூன்னகைக்கும் போதெல்லாம்
தினம் உனக்காக
ஒரு கவிதை எழுதிகிறேன்..

உந்தன் பார்வை சொல்லும்
கவிதையை என்னால்
உணர முடிகிறது..

இதற்க்கு பெயர் என்ன?
தனிமையில் என்னை
தொலைத்து தேடும் அந்த
அற்புதமான் நிமிடத்தில்
அறிந்துக் கொண்டேன்..
அதன் பெயர் தான்
காதல் என்று?

Tuesday, June 2, 2009

வாழ்க்கை..!


வெளியில் சிரித்துக் கொண்டு
உள்ளுக்குள் அழுகிறேன்..
எல்லோருக்கும் சில நேரம்
வரும் சோதனை..
ஆனால் எனக்கு வாழ்நாள்
முழுதும் சோதனையே..

என் உணர்வுகளை புரிந்தவர்கள்
உலகில் இல்லை.
ஒவ்வொரு எதிர்பார்புகளும்
ஏமாற்றத்தில் தான்
முடிகிறது..?கனவுகள்
நிஜமாகவும் இல்லை..

காலங்கள் கடந்தாலும்
காயங்கள் இன்னும்
ஆறவில்லை..! வேதனைகள்
சிறிதும் குறையவில்லை..!
ஏன் இந்த வாழ்க்கை ?

Saturday, May 23, 2009

என்னை பற்றி..

1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
~திவ்விய என்பது என் நிஜ பெயர். நண்பர்கள் எல்லாம் அதனை சுருக்கி வியா என்று வைத்து விட்டார்கள். எனக்கு மிகவும் பிடித்த வித்தியசமான பெயரும் கூட.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
~24/05/2009 நள்ளிரவு. விதியை நினைத்து அழுதேன்.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
~நீரற்று ரொம்பவே பிடிக்கும். கையில் ஒரு காகிதமும் பேணவும் இருந்தால் போதும் எதையாவது எழுத ஆரம்பித்து விடுவேன்.

4.பிடித்த மதிய உணவு என்ன?
~சைவ உணவு ரொம்ப பிடிக்கும். சாம்பார், பாகற்காய் பொறியல்.

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
~ம்ம்ம்ம் நட்பு நான் மிகவும் மதிக்கும் உறவுகளில் ஒன்று. அதனால் உடனே வைத்துக் கொள்வேன்.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
~இரண்டுமே பிடிக்கும்..இருந்தாலும் கடலில் குளிப்பதில் மனதில் ஒரு சந்தோசம்.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
~உடை,அவரின் பேச்சு,கண்கள்

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
~பிடித்த விஷயம்: எதை செய்தலும் சிந்தித்து செயல்படுவது மற்றும் எனது குரல் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
~பிடிக்காத விஷயம்: கோபம் என்னிடம் எனக்கு பிடிக்காது.

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
~அன்பு வைப்பது தான்.
அன்பு வைத்தவர்களிடம் விரைவில் ஏமார்ந்து போவது. என்னை பற்றி இது நாள் வரை யோசித்ததில்லை.

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
~என் நண்பர்கள்.

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
~சிவப்பு வர்ண டோப்ஸ்.

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
~'இரவா பகலா' என்ற பாடல்.

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
~கண்டிப்பாக எனக்கு பிடித்த நீல நிறம் மட்டுமே.

14. பிடித்த மணம் ?
~ரோஜா பூவின் மணம்.

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
~விக்கி: அருமையான பயனுள்ள பதிவுகளை எழுதுவர். அவருடைய பதிவுகளை படிக்கவே ஆர்வமாக இருக்கும். வலைப்பதிவை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவரும் கூட.

~நட்புடன் ஜமால்: கவிதைகள் எல்லாம் அருமை. இவரின் பதிவுகளை மறவாமல் படித்துவிடுவேன். முதலில் அறிமுகமான நண்பர். அருமையான நண்பர் என்ற சொல்லலாம்.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?
~காயத்திரி அக்கா. அருமையாக கவிதை எழுதுவர். அதில் எப்படியாவது நிஜம் கொஞ்சம் கற்பனை கொஞ்சம் கலந்திருக்கும். எனக்கு பிடித்து அது தான்.

17. பிடித்த விளையாட்டு?
~காற்பந்து பார்க்க பிடிக்கும். பூப்பந்து அப்பாவுடன் சேர்ந்து விளையாடுவேன்.

18.கண்ணாடி அணிபவரா?
~இல்லை.

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
~நல்ல காதல் மற்றும் குடும்ப கதைகளை கொண்ட திரைப்படம் பார்க்க பிடிக்கும். வடிவேலு காமடி படம் என்றால் சொல்லவே தேவையில்லை. மூன்று நான்கு முறையாவது பார்த்து விடுவேன்.

20.கடைசியாகப் பார்த்த படம்?
~கடைசியாக பார்த்த படம்...அயன்.

21.பிடித்த பருவ காலம் எது?
~மழைக்காலம். மழையில் விளையாட ரொம்ப பிடிக்கும். கவலையாக இருக்கும் பொழுது மழையும் என்னுடன் சேர்ந்து அழுவதுப் போலவே இருக்கும்.

22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
~இப்போ புத்தகம் படிப்பது குறைவாகவே உள்ளது. வேலைகள் அதிகம்.

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
~என்றாவது ஒரு முறை தான் பார்ப்பேன்.

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
~பிடித்த சத்தம்: என்னுடைய போன் சத்தம்.
~பிடிக்காத சத்தம்: வீட்டில் நான் இருக்கும் பொழுது தொலைக்காட்சியில் ஓடும் சிரியல் சத்தம்.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
~நிறைய இடங்களுக்கு சென்றுள்ளேன். குறிபிட்டு சொல்ல முடியாது.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
~தனித் திறமை என்றால் கவிதை எழுவது தான். அதை தவிர நன்றாக பாடுவேன்.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
~இன்று வரை என்னை சுற்றி நடக்கும் சம்பவங்களில் பதி என்னால் ஏற்றுக் கொள்ள முடியாதது. இப்படியே சொல்ல போனால் சொல்லிக் கொண்டே போகலாம்.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
~அன்பு. அன்புக்கு என்றுமே நான் அடிமை.

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
~பிடித்த சுற்றுலா தலம் பினாங் மாநிலம். எத்தனை முறை போனாலும் மீண்டும் மீண்டும் போக மனம் ஏங்கும்.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
~ம்ம்ம் ஒரு அன்பான பண்பான பெண்ணாக இருக்க வேண்டும் என்று ஆசை. என்னை சுற்றி இருப்பவர்கள் என்னை புரிந்துக் கொள்ள வேண்டும்.

31.மனைவி/ கணவர் இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
~திருமணம் ஆகவில்லை. இதை பற்றி கருத்து இல்லை. மன்னிக்கவும்.

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
~வாழ்க்கை என்பது ஒரு முறை தான். அதனால் உடன் இருக்கும் உறவுகளிடம் கொஞ்சமாவது பாசமாகவும் அன்புடனும் நடந்துக் கொள்வோம். அவர்கள் இல்லாத பொழுது வருந்துவதில் பயன் இல்லை. வாழ்க்கை பயணம் என்பது மிகவும் அழகான பூக்களால் நிரம்பிய பாதை. அதனை முட்க்களால் சேத படுத்த வேண்டாம்.

அழகான நாட்கள்..!


அன்புள்ள டைரி,

எனது வாழ்வில் சோகமான நாட்களே அதிகம், அதில் பலவற்றை நான் மறக்க நினைக்கிறேன். ஆனால் சந்தோஷமான நாட்கள் மிகவும் குறைவு, அதனை நான் மரணம் வரும் நேரத்திலும் மறக்க நினைப்பதில்லை. அந்நேரத்தில் நான் கழித்த ஒவ்வொரு நிமிடமும் அர்த்தமானது. அந்த அர்த்தத்திலும் என் ஆனந்த கண்ணீர் சேர்ந்துள்ளது.

அப்படி நான் சந்தோசமாக கழித்த நாட்கள் என் பள்ளிக்கூட வாழ்க்கை. நட்பு என்னும் வட்டதிற்குள் நான் பட்டாம்பூச்சையை சிறகடித்து பறந்த அந்நாள் இன்று வரை நினைத்தாலே இனிக்கும் தருணம். நான் படித்த நாட்களில் எனக்கு நண்பர்களுக்கு மட்டும் குறைவே இல்லை. எப்பொழுதும் நண்பர்கள் கூட்டம் என்னை சுற்றி இருந்துக் கொண்டே தான் இருக்கும். இதற்காக அப்பாவிடம் கூட திட்டு வாங்கியதுண்டு (ரகசியம் யாரிடமும் சொல்ல வேண்டாம்). என் சேட்டைகளுக்கு அளவே இல்லை, இருந்தாலும் படிப்பிலும் கவனம் தவறியது இல்லை.

நாங்கள் போகாத இடமே இல்லை,பார்க்காத சினிமா படங்கள் இல்லை. எனக்கு 'சுட்டிப் பெண்' என்று புனைபெயர் வைத்து விட்டர்கள். எப்படி தான் ஆட்டம் போட்டாலும் தேர்வு நேரத்தில் நாங்கள் எல்லாம் ஒன்றாக படிக்கும் பொழுது அதில் கிடைக்கும் சந்தோசம் ஒரு தனி சந்தோசம் தான். அதே பள்ளிக்கூட நாட்கள் தான் எனக்கு பல அனுபவங்களையும் கற்றுக் கொடுத்து. நட்பை மட்டும் தரவில்லை.காதல்,படிப்பு,பிரிவு,துயரம்,சந்தோசம்,சண்டை என இன்னும் நிறைய அனுபவங்கள். கவிதை, கதை எழுதும் திறமை என்னுள் "இலைமறை காயாக" மறைத்து இருப்பதை கண்டு பிடித்தவர்களே என் நண்பர்கள் தான். எனக்குள் இப்படி ஒரு திறமை இருப்பதை அன்று தான் நானே உணர்ந்தேன்.அவர்களால் தான் நானும் இன்று கவிதை எழுதுகிறேன்.

பள்ளிக்கூட வாழ்கையை பற்றி சொன்னால் சொல்லிக் கொண்டே போகலாம். அவ்வளவு அழகான நாட்கள். நான் மறக்க முடியாத நாட்கள்.
எங்கோ பிறந்தோம் நட்பு என்ற கூட்டுக்குள் இணைத்தோம். இன்று அனைவரும் எங்கோ ஒரு இடத்தில் இந்த நட்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறோம். அந்த நட்பு எங்கே? மீண்டும் கிடைக்குமா அந்த பொற்க்காலம்.

நட்புடன்,
....................

இது 100% உண்மையே..

Thursday, May 21, 2009

மனமே மனமே..!

அன்புள்ள டைரி,

ஏனோ தெரியவில்லை இன்று மனம் மிகவும் கஷ்டமாக உள்ளது. என் மன வேதனையை எழுத்துக்களால் சொல்ல இயலாது. நான் நேசித்த உறவுகள் யாவும் இன்று உடன் இல்லை. உடன் இருக்கும் உறவுகள் யாவும் நான் நேசிப்பவை அல்ல. மனதை கல்லாக வைத்துக் கொண்டு வாழ முடியவில்லை.

பிறப்பது பற்றியும் இறப்பது பற்றியும் கவலைப்படாமல் வாழ்கின்றவர்கள் பலருண்டு. ஏன் பிறந்தோம்? என்ற கேள்வியைக் கேளாத வரை,தொல்லை ஒன்றும் இல்லை. 'கண்டதே காட்சி கொண்டதே கோலம்' என்று இருப்பவர்களை எவ்விதமான துன்பமும் சுலபத்தில் வந்து அடைவதில்லை. ஏன் எனக்கு மட்டும் இப்படி ஒரு நிலைமை? பிறந்து விட்ட நாம், ஏதோ இறப்பு வருகின்ற வரை இருந்துவிட்டு போகின்ற நாளில் போய்விடலாம் என்று வாழ்ந்தால் கவலை இல்லைதான். கவலை இல்லாமல் வாழலாம் என்பதற்காக,வாழ்வில் மேற்கொள்ள வேண்டியவற்றை விட்டு விட்டு வாழ முடியுமா?

உறவுகளின் இடையில் சந்தோசமாக வாழ ஆசை,அவர்களின் துணையோடு வாழ்கையில் வெற்றியடைய ஆசை, அன்னையின் மடியில் உறங்க வேண்டும், இன்பத்தையும் துன்பத்தையும் பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என இன்னும் நிறைய ஆசைகள் மனதினுள். என் ஆசைகள் எல்லாம் நிறைவேறாத ஆசைகளாக இன்னும் என்னுள் முழ்கி கிடக்கின்றன. என்றாவது என் ஆசைகள் நிறைவேறும் அன்று வரை காத்திருப்பேன்.

அன்புக்காக ஏங்கும்,
.....................................

இது 50% கற்பனையே..!

Sunday, May 17, 2009

காதல் தந்த பரிசு 6

அவள் கண்களை அவளால் நம்ப முடியவில்லை. அந்த இடமே அவளின் வருகைக்காக காத்திருந்தது. அழகான கடற்கரை பொழுது, இரவு நேரம் அதற்கு துணையாக நிலவு, கடல் தேவதையின் சிலுங்கள், அவளின் பொன்னான பதங்களை முத்தமிட்டு செல்லும் அலைகள். ஆம், அன்று திவ்யாவின் பிறந்த நாள். அவளே தன் பிறந்த நாளை மறந்துவிட்டாள். இவை யாவும் சர்வினின் ஏற்பாடுகள். அப்பொழுது தான் திவ்யா சர்வினிடம் சொன்ன ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது."என் பிறந்த நாளை கடற்கரை ஓரத்தில் நிலவின் வெளிச்சத்தில் கேக் வெட்ட வேண்டும் சர்வின்,அது என் நீண்ட நாள் ஆசை. என்று தான் என் ஆசைகள் கை கூடுமோ?."

சரியாக இரவு மணி 12.
"wishing you happy birthday dear.May all your dreams became true on this wonderful day" என்றபடியே அவளின் நெற்றியில் ஒரு முத்தத்தை பரிசாக தந்தான்.
"தங்க யு சர்வின். என் வாழ்நாள் முழுதும் மறக்க முடியாத பிறந்த நாள் இது. தேங்க்ஸ்".
" ஓகே இன்று என் தேவதையின் பிறந்த நாள் சோ கவலை வேண்டாம் கேக் கட் பண்ணு."
பிறகு இருவரும் கடற்கரை ஓரத்தில் நடக்க ஆரம்பித்தனர். அவளின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. திவ்யா இரவு நேரத்தையும் கடற்கரையையும் ரசித்த வண்ணமாகவே நடந்து வந்தாள். ஆனால் சர்வின் அதற்க்கு எதிர்மாறாக திவ்யாவின் அழகை ரசித்துக் கொண்டே நடந்து வந்தான். மகிழ்ச்சியை முழுதாக கண்களில் நிரப்பி கொண்டிருக்கும் கண்கள், வார்த்தையே இல்லாமல் எதையோ சொல்ல துடிக்கும் உதடுகள், இரவு பனித்துளி அவளது முக்கில் முக்குத்தியாக, அலைகளின் ஓசையை ரசித்துக் கேட்கும் காதுகள், அழகான நெற்றி, காற்றில் பறக்கும் கருமை நிற கூந்தல்,கடலோடு துள்ளி கூதிக்கும் கால்கள். அப்பப்பா..
இப்படியே காதலியின் அழகை ரசித்துக் கொண்டே இருந்தான். அப்பொழுது அவனின் நினைவுக்கு வந்த பாடல் 'தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன்' என்ற பாடலே.

மௌனமாக இருந்த இரவில் திவியாவே பேச்சை தொடங்கினாள்.
"சர்வின் எப்படி உனக்கு என் பிறந்த நாள் யாபகத்தில் இருந்தது. உண்மையில் எனக்கு இது மிக பெரிய பரிசு. மீண்டும் ஒரு முறை எனது நன்றி."
"அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை, நாம் ஒருவரை உண்மையாக நேசித்தல் அவர்களை பற்றிய நினைவுகள் மட்டுமே நம்மிடம் இருக்கும். அதேபோல் தான் நான் ஒவ்வொரு நிமிடமும் நேசிப்பது காதலிப்பது உன்னை மட்டுமே, அப்படி இருக்கும் பொழுது உன் பிறந்த நாள் எனக்கு நினைவு இருக்காத" அவளை கவரும்
அந்த சிரிப்பை சிரித்தான்.


***********************************
திவ்யாவின் டைரியில் இன்று அவள் எழுதியது யாவும் சர்வினை பற்றி மட்டுமே.
எப்பொழுதும் தன் சோகத்தையும் கவலையையும் மட்டும் கவிதையாக எழுதும் அவள். இன்று தான் காதலை கவிதையாக எழுதினாள்.

என் மனதை உருகி
பூத்த முதல் காதல் நீ
அன்பின் உருவமாய்
அழகாய் அற்புதமாக
என் மனம் கவர்ந்தவனே..!

என் மனம் என்னும் பூட்டை
காதல் என்னும் சாவியால்
திறந்தாய்..!
அழகிய காதல் முத்திரை நீ..!

உலக அதிசயங்களில்
என்னுள் உனக்கே முதலிடம்..
என்னுடன் நீ இருந்தால்
இன்றும் மட்டுமல்ல
தினம் தினம் எனக்கு
பிறந்த நாள் தான்..

உன் சுவாசத்தில் கலந்திருப்பேன்
உன் மூச்சுக்காற்றாக..

இரவின் நட்சத்திரங்கள் சிறுகச் சிறுக மறைந்துக் கொண்டே வந்தது. காலைப் பொழுது பணிவாய் மலர்ந்தது. கதிரவனை வரவேற்றது. காலை வேலை மகிழ்ச்சியாக புலர்ந்தது. தனது காலை கடமைகளை முடித்து விட்டு வரவேற்பறைக்கு இறங்கினாள். வீடு முழுக்க ஒரே கலகலப்பாக இருந்தது. அனைவரும் மாறி மாறி பிறந்த நாள் வாழ்த்துகளை கூறினார். ஆனால் அவளின் அண்ணனை மட்டும் காணவில்லை. ஒவ்வொரு பிறந்த நாளும் அண்ணன் தான் முதல் வாழ்த்துக்கள் கூறுவான். ஆனால் இன்றும் எங்கே போனான்.

வீடு முழுக்க தேட ஆரம்பித்தாள். ஆனால் எங்கும் காணவில்லை.
"அப்பா அண்ணா எங்கே. எங்கு தேடியும் காணவில்லை."
" அவனுக்கு இன்றும் காலையிலையே வேலை. சோ வேலைக்கு சென்று விட்டான்."
கோபத்துடன் தன் அறைக்குள் வந்து பூகுந்துக் கொண்டாள்.

தொடரும்..